நட்சத்திரம் என்று அந்நியப்படுத்தாதீர்; தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்: கமல்ஹாசன்

நட்சத்திரம் என்று சொல்லி அந்நியப்படுத்தாமல், தன்னை எப்போதும் தொழிலாளியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நட்சத்திரம் என்று அந்நியப்படுத்தாதீர்; தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்: கமல்ஹாசன்

நட்சத்திரம் என்று சொல்லி அந்நியப்படுத்தாமல், தன்னை எப்போதும் தொழிலாளியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பு (ஃபெப்சி) சார்பில் மே தின விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அவர் பேசியது: அரசியல் பரபரப்புகள் நிறைந்த இந்தக் கட்டான நேரத்தில் விழா நடைபெறுகிறது. இது மாதிரியான நேரத்தில் கோரிக்கை வைப்பது இயல்புதான். ஆனால் இந்தக் கோரிக்கை இப்போது தயார் செய்யப்பட்டது அல்ல. நீண்ட காலமாக உள்ள கோரிக்கை.

இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதல்ல. ஆனால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை ஆகும். அதனால் நிறைவேற்றாமல் விட்டு விடாதீர்கள்.

திரைப்படத்துறையினரின் அறிவு சார் சொத்து பதிவை பதிவு செய்ய நாங்கள் தில்லிக்கு வர வேண்டியுள்ளது. அதை சென்னையிலே பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இதை ஒரு நட்சத்திரமாக கேட்கவில்லை. தொழிலாளியாக கேட்டுக் கொள்கிறேன். நான் எப்போதும் தொழிலாளிதான். கமல்ஹாசன் என்கிற நட்சத்திரத்தை காப்பாற்றிக் கொள்ள எனக்குள் இருக்கும் கடுமையான உழைப்பாளிதான் உதவுகிறார்.

நட்சத்திரம் என்று சொல்லி அந்நியப்படுத்த வேண்டாம். என்னை எப்போதும் தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

சுமார் 40 ஆண்டுகளாக செய்ய எண்ணிக் கொண்டிருந்ததை, இப்போது வந்திருக்கிற நடிகர் சங்க நிர்வாகிகள் செய்து காட்டி வருகின்றனர். தவற விட்டதை செய்து முடித்தவர்கள் என்று அவர்களுக்கு பட்டம் அளிக்கலாம் என்றார் கமல்ஹசான்.

மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா: மருத்துவ உதவி, ஓய்வூதியம், கல்வி, வீடு என பலவித கோரிக்கைகளை ஃபெப்ஸி அமைப்பினர் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படும். நாட்டின் முறையாக அங்கீகரிப்பட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 7 கோடி பேர் உள்ளனர்.

முறைப்படுத்தப்படாத சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 40 கோடி பேர் உள்ளனர். திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்கங்கள் இந்த முறைப்படுத்தப்படாத வரிசையில் சேருகின்றன.

இந்த அமைப்பு சாரா சங்கங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வை வளப்படுத்த மோடி தலைமையிலான அரசு பல விதமாக சிந்தித்து வருகிறது. ஃபெப்சி அமைப்பில் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இந்த உறுப்பினர்களுக்கு உதவுவது எங்களின் கடமை. கமல்ஹாசன் இங்கே வைத்த கோரிக்கை தேர்தல் முடிந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சங்கச் செயலர் விஷால், ஃபெப்சி அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com