சென்னை: சிறிய இடைவெளிக்குப்பிறகு ட்விட்டரில் மீண்டும் கணக்குத் துவங்கிய 'வைகைப் புயல்' வடிவேலு ஒரேநாளில் 34 ஆயிரம் பாலோயர்களைப் பெற்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பெயர் வடிவேல், இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 1991 ம் ஆண்டு கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்.
கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தனது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மழையில் நனையவைத்தார். கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியவர் வடிவேல் என்று சொன்னால் மிகையாகாது.
வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப் பெயருடன் பரவலாக அழைக்கப்படுகிறார்.
தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் வடிவேலு கடந்த மார்ச், 20 தேதி ட்விட்டரில் மீண்டும் கணக்கைத் தொடங்கினார். அவர் கணக்குத் தொடங்கிய ஒரே நாளில் 34 ஆயிரம் பாலோயர்களைப் பெற்றுள்ளது என்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம்