நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ’சூரரைப் போற்று’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கடந்த வருடம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அப்போது படத்தின் தலைப்பு 'வாடிவாசல் ' என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன் வாடிவாசல் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவந்த நிலையில் அந்தப் படத்தில் இயக்குநர் அமீர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வடசென்னை' படத்தில் ராஜன் என்கிற முக்கியக் கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார். படம் வெளியான பின் அந்தக் கதாப்பாத்திரத்திற்காகவே அதிகம் பேசப்பட்டார். தற்போது வாடிவாசல் படத்தில் மீண்டும் வெற்றிமாறனுடன் இணைய இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவல் எழுந்துள்ளது.