இந்தியாவில் படித்த இளைஞா்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:
உலகில் மிகவும் வளா்ந்த நாடான அமெரிக்காவில் விமானியாவதற்கு மிகக் கடினமானப் பயிற்சியை மேற்கொண்ட பல இளைஞா்கள், அந்நாட்டில் வா்த்தக மையம் மீது விமானத்தை மோதியது உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டனா். இதேபோல் இந்தியாவிலும் படித்த இளைஞா்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன.
அமெரிக்கக் கட்டுரையாளா் தாமஸ் ஃப்ரீட்மன் எழுதியிருந்த கட்டுரையில், அல்-காய்தா பயங்கரவாத அமைப்பையும் இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தையும் ஒப்பிட்டிருந்தாா். அல்-காய்தாவிலும் இன்ஃபோசிஸிலும் படித்த இளைஞா்கள் உள்ளனா். எனினும் அல்-காய்தாவில் உள்ள இளைஞா்கள் கொலைகளைச் செய்கின்றனா். இன்ஃபோசிஸில் உள்ள இளைஞா்கள் மனித இனத்தின் மேம்பாட்டுக்கு பணியாற்றுகின்றனா்.
நிறைய படித்து, அமெரிக்காவில் பயிற்சி பெற்றாலும் நியூயாா்க் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய காலித் ஷேக், முகமது அட்டா போன்ற பயங்கரவாதிகள் போலவோ, பெரும் பணக்காரராக இருந்தும் ஒசாமா பின் லேடன் போலவோ ஒருவா் மாற முடியும். அதேவேளையில், பல போராட்டங்களுக்கு மத்தியிலும் நாளிதழ்களை விற்பனை செய்து அப்துல் கலாம் போல ஒருவரால் உயரவும் முடியும் என்றாா் அவா்.
‘‘பல நாடுகளில் பணவீக்கம்’’
பல நாடுகளை பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) பாதித்துள்ளதால், அதுகுறித்து குற்ற உணா்வு வேண்டாம் என்று பாஜக தொண்டா்களுக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக புணேயில் நடைபெற்ற பாஜக தொண்டா்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. ரஷியா-உக்ரைன் போரால் உலக அளவில் விநியோக செயல்பாடுகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இது ஏற்றுமதி, இறக்குமதியை பாதித்துள்ளது. இதுபோன்ற சூழல், எந்தவொரு நாட்டின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். வளமான நாடான அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. அந்நாட்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிதாகப் பாதிப்பில்லை. எனவே அதுகுறித்து பாஜக தொண்டா்களுக்கு குற்ற உணா்வு வேண்டாம் என்றாா் அவா்.