நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் படத்தை வெளியிடுவது என்பது மடத்தனமானது என்றுகூட சொன்னார்கள். ஜி.வி. பிரகாஷ் நடித்த படமான கடவுள் இருக்கான் குமாரு அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டதும் இந்தக் காரணத்தினால்தான்.
ஆனால் சிம்பு, மஞ்சிமா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தைத் துணிச்சலுடன் கடந்த வெள்ளியன்று வெளியிட்டார்கள். கெளதம் மேனனுக்கு சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. முதல் நாளில் மட்டும் இந்தப் படத்துக்கு சென்னையில் ரூ. 65 லட்சம் வசூல் கிடைத்துள்ளது. இந்த வருடம் வெளியான கபாலி, தெறி படங்களுக்குப் பிறகு சென்னையில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமை அச்சம் என்பது மடமையடா-வுக்குக் கிடைத்துள்ளது. முதல்நாளன்று, தமிழகம் முழுக்க ரூ. 4 கோடி கிடைத்துள்ளது. இதேபோல சனி, ஞாயிறு என இரு தினங்களிலும் முதல் நாளில் கிடைத்த வசூலை விடவும் அதிகளவு கிடைத்துள்ளதால் படம் ஹிட் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அச்சம் என்பது மடமையடா படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. இதற்காக செலுத்திய உழைப்பு, காத்திருப்பு, பிரச்னைகள் என எல்லாவற்றுக்கும் ஓர் அர்த்தம் கிடைத்துள்ளது. இதற்காக நானும் சிம்புவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு எழுதியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.