முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா, விதார்த், பூர்ணா, பால சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - கொடிவீரன். இசை - ரகுநந்தன். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படம் நவம்பர் 30 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் சசிகுமாரின் உறவினர் அசோக் குமாரின் தற்கொலை மற்றும் பணப்பிரச்னை காரணமாக படம் குறித்த நேரத்தில் வெளியாவது தடைபட்டது. இதையடுத்து இன்று இப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படவெளியீட்டை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அசோக் குமாருக்கு சசிகுமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார், கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார், தனது இறப்புக்கு திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.