ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் 1500-வது சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன் போல நடித்து, என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா வசனம் மூலம் புகழ்பெற்ற ராமர்!
இந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவரும் பங்கேற்று தங்கள் குடும்பப் பிரச்னையை விவாதித்தார்கள்! இந்நிகழ்ச்சியை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தாலும் வேறொரு விதத்தில் அவதூறு பரப்ப காரணமாகிவிட்டது.
இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், லட்சுமி ராமகிருஷ்ணன் மீது புகார் உள்ளதாக இயக்குநர் கூறுவதுபோல காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதன்பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இடத்தில் அவரைப் போலவே வேடமணிந்த ராமர் அமர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அவர் கணவரையும் விசாரிப்பதுபோல நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் தனது மனைவி மீது புகார் அளிப்பது போலவும் அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் அளிப்பதுபோலவும் இருவரையும் ராமர் விசாரித்து அறிவுரை வழங்குவதுபோலவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.
இதையடுத்து வித்தியாசமான முறையில் அமைந்த இந்நிகழ்ச்சியைப் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதினார்கள்.
இன்றைய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நாடகமாக இருக்கலாம். ஆனால் அதில் பேசப்பட்டவை உண்மையானவை என்று இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
எனினும் சில யூடியூப் காணொளிகளில் இந்நிகழ்ச்சியை முன்வைத்து லட்சுமி ராமகிருஷ்ணன் வாழ்க்கையில் பிரச்னை உருவாகியுள்ளதாக அவதூறுகள் பரப்பப்பட்டன. இதுபற்றி ட்விட்டரில் கொந்தளித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
செய்தியைத் திரித்து இதுபோல வெளியிடுவது மோசமான அவதூறாகும். தங்களை ஊடகம் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் கண்ணியமான ஊடகங்களுக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள். சமூகத்தின் சாபக்கேடு இவர்கள் என்று சாடியுள்ளார்.
சொல்வதெல்லாம் உண்மை - 1500-வது சிறப்பு நிகழ்ச்சி