வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர் நடிகை நயன்தாரா. கோலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதன் காரணம் அவரது கதைத் தேர்வு எனலாம். தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் அறம். இது பரவலான கவனம் பெற்று சூப்பர் ஹிட் ஆனது.
தமிழில் நயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த படம் 'கோலமாவு கோகிலா'. இது முற்றிலும் வித்தியாசமான படம். முழுக்க நாயகியை மையமாக கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.
'சைத்தான்', சத்யா ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் அடுத்த படம் கன்னட படமான யூ டர்னின் ரீமேக். சஸ்பென்ஸ் திரில்லர் இன வகையில் உருவான அந்தப் படம் சாண்டல்வுட்டில் சூப்பர் ஹிட்டானது.
பவன்குமார் இயக்கத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் நிருபராக நடித்திருந்தார். வேலை விஷயமாக அவர் தேடிச் செல்லும் ஒவ்வொரு நபரும் மர்மமான முறையில் விபத்தில் அல்லது தற்கொலை செய்து கொண்டும் இறக்கிறார்கள். அதன் காரணத்தைத் கண்டுபிடிக்க முயற்சி செய்யும் ஷ்ரத்தாவுக்கு ஏற்படும் அதிர்ச்சியை நெகிழ்ச்சியான கதை சொல்லலின் மூலம் கூறியிருப்பார் இயக்குநர். தமிழில் சில மாற்றங்கள் செய்து, அதே கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.
நயன்தாரா இந்தப் படத்தை தானே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. புதிய அவதாரத்தில், அடுத்த ஹிட்டுக்கு தயாராகிவிட்டார் நயன்தாரா என்கிறது கோலிவுட் வட்டாரம்.