சட்டவிரோதமாக திரைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் இணையத்தளங்கள் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு சி.டி. தயாரிப்போரை கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் அளிக்கவும், இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவோரைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் நபர்கள் குறித்த ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளரைக் கடந்த செப்டம்பர் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாகத் திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 3 இணையத்தளங்கள் மீது வழக்குப்பதிவு (எஃப்.ஐ.ஆர். பதிவு) செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படை வெல்லும் படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டது தொடர்பாக ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள்.