இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து கோலி - அனுஷ்கா தம்பதியரின் திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டிசம்பர் 21 அன்று தில்லியில் உறவினர்களுக்கான வரவேற்பு நடைபெறவுள்ளது. டிசம்பர் 26 அன்று மும்பையில் திரைத்துறையினர் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் உள்ள நண்பர்களுக்கான வரவேற்பு நடைபெறவுள்ளது.
மும்பை வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்வார்கள். அங்கு டெஸ்ட் தொடருக்காக கோலி தயாராவார். புத்தாண்டை கோலியுடன் அங்குக் கொண்டாடவுள்ள அனுஷ்கா சர்மா, ஜனவரி முதல் வாரம் இந்தியாவுக்குத் திரும்புவார். மும்பையில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கும் ஆனந்த் எல் ராய் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். பிப்ரவரியில் வருண் தவனுடனான படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார். பிப்ரவரி 9 அன்று வெளியாகவுள்ள Pari படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் அனுஷ்கா கலந்துகொள்வார்.
விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தொடர்களில் பங்கேற்று 2 மாதம் அங்கேயே இருப்பார்.
திருமணத்துக்குப் பிறகு தில்லியிலிருந்து திரும்பியவுடன் இருவரும் மும்பை வோர்லிக்கு இடம்பெயர்ந்து புதிய வீட்டில் வசிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.