முகாந்திரம் இருந்தால் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதியில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது என்று நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு படவிழாவில் பேசினார். இது இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலும் இரு மதங்களுக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக இந்து முன்னணி நிர்வாகி வி.ஜி. நாராயணன், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இப்புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் மீது காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு, முகாந்திரம் இருந்தால் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.