நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஷால் நேரில் ஆஜராகி விளக்கம்!

இந்த வழக்கில் தீர்வு காணும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் உத்தரவாதம் அளித்து விட்டு...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஷால் நேரில் ஆஜராகி விளக்கம்!

நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் ராதாரவியை நீக்கியது தொடர்பாக நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார். இதனையடுத்து முன்னாள் நிர்வாகிகளான நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து ராதாரவி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்வு காணும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் உத்தரவாதம் அளித்து விட்டு, அவரை சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை ராதாரவி தொடர்ந்தார்.

இது தொடர்பாக விஷால் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் விஷால் வரும் வெள்ளிக்கிழமை (22-ம் தேதி ) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளின்படியே ராதாரவி நீக்கப்பட்டார் என விஷால் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜனவரி 18 அன்று வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது. மேலும் விசாரணைகளிலிருந்து விஷால் நேரில் ஆஜராகவும் விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com