அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றங்களில் மெர்சல் படம் தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மெர்சல் விவகாரம் தொடர்பாக அமைதி காத்து வந்த விஜய், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மெர்சல் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இத்திரைப்படத்துக்குச் சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலையுலகைச் சார்ந்த நண்பர்கள், அரசியல் தலைவர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் எனக்கும் மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.
மெர்சல் படத்தை வெற்றிபெறச் செய்ததற்கும் ஆதரவு கொடுத்ததற்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஜய் அறிக்கை வெளியான லெட்டர் பேடில் ஜோசப் விஜய் என்கிற பெயரும் ஜீசஸ் சேவ்ஸ் என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளன. ஜோசப் விஜய் என்கிற பெயரை முன்வைத்து சர்ச்சைகள் உருவான நிலையில் இந்த அறிக்கையை தன் லெட்டர்பேடியிலேயே வெளியிட்டுள்ளார் விஜய்.