‘ஒரு அடார் லவ்' என்கிற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலராய பூவி...' பாட்டில் நடிகை பிரியா வாரியர் புருவங்களை வில்லாக வளைத்து கண்ணடிக்கும் காட்சியும் அப்பாடலின் காணொளியும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
எனினும் 'மாணிக்க மலரயா பூவி' பாடலின் வரிகள், முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவது போல் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து ஹைதராபாதில் உள்ள பலக்நுமா காவல்நிலையத்தில் தொழிலதிர் ஜாகிர் அலி கான், மாணவர் முகில் கான் உள்ளிட்டோரால் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், 'ஒரு ஆதார் லவ்' படத்திலுள்ள பாடலின் வரிகள், முகமது நபிகளின் மனைவி குறித்து ஆட்சேபிக்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது; இது முஸ்லிம் மத உணர்வுகளைக் காயப்படுத்துவது போல் இருக்கிறது. இந்த சர்ச்சைக்குரிய பாடலை நீக்க வேண்டும் அல்லது பாடல் வரிகளில் திருத்தம் செய்ய வேண்டும். பாடலை எழுதிய இயக்குநர் ஒமர் லூலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த படத்தின் இயக்குநரும், சர்ச்சைக்குரிய பாடலை எழுதியவருமான ஒமர் லூலு மற்றும் நடிகை பிரியா வாரியருக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டத்தின் 295ஏ (மத உணர்வுகளைக் காயப்படுத்துதல்) பிரிவின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள்.
ஒரு ஆதார் லவ் படக்குழுவினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, கருத்து சுதந்தரத்துக்கு எதிரானதாக உள்ளது. எனவே அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று நடிகை பிரியா வாரியரும் இயக்குநர் ஓமர் லூலுவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஒருவர் ஒரு படத்தில் பாடலைப் பாடுகிறார். வேறு வேலையின்றி நீங்கள் அவர் மீது வழக்குப் பதிவு செய்கிறீர்கள் என்று தெலங்கானா அரசின் நடவடிக்கையை விமரிசித்தார். இதையடுத்து நடிகை பிரியா வாரியர் மற்றும் இயக்குநர் ஒமர் லூலு மீதான வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.