கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. கஜா புயலில் இருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு அனைவரும் நிதியுதவி செய்யவேண்டும் என்று பிரபல நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:
கஜா புயல் பாதிப்பால் டெல்டா பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவுக்கு அதிக வருமானத்தைத் தரும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாகப் பலர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அவர்களுக்கு மாநில அரசும் மத்திய அரசும் உதவ முன்வந்துள்ளன. ஆனால் நம்மைப் போன்றவர்களும் மனிதத்தன்மையுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும். ஒரே தேசம், ஒரே மக்கள் என்பதே இந்தியாவின் ஒற்றுமை. நம் சகோதரத்துவத்தை உணர்த்தும் நேரம் இது. மக்கள், கஜா புயலால் நேர்ந்த பாதிப்புகளிலிருந்து மீண்டுவர உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அமிதாப் பச்சனின் இந்த வேண்டுகோளுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.