சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படமான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அஸ்ஸாமி மொழித் திரைப்படமான "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை இந்திய திரைப்படக் கூட்டமைப்பு (எஃப்எஃப்ஐ) கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. ரீமா தாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படம் தேசிய விருது உள்பட பல முக்கிய விருதுகளை ஏற்கெனவே பெற்றது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தின் கிராமம் ஒன்றைக் கதைக் களமாகக் கொண்ட அப்படம், வறுமையைத் தவிர வேறு எதையும் அறியாத 10 வயது சிறுமியின் கனவுகளை பேசுகிறது. கிதார் இசைக் கருவியை வாங்குவதையும், கிராமிய இசைக் குழு ஒன்றை அமைப்பதையுமே இலட்சியமாகக் கொண்ட அந்த பதின் பருவ சிறுமியின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வலிகளும், வண்ணங்களும்தான் "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படத்தின் கருப்பொருள்.
இந்நிலையில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் 9 படங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் இடம்பெறவில்லை. அதேபோல நார்வே-யைச் சேர்ந்த வாட் வில் பியூப்பிள் சே என்கிற படத்தில் இந்திய நடிகர்கள் பிரதான வேடங்களில் நடித்திருந்தார்கள். அப்படமும் தேர்வாகவில்லை.
மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்தியப் படங்களே ஆஸ்கர் விருதுக்கு (டாப் 5) இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த மூன்று படங்களும் அவ்விருதைப் பெறவில்லை. இதையடுத்து சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை இதுவரை எந்தவொரு இந்தியப் படமும் பெறவில்லை என்கிற நிலைமை இந்த வருடமும் தொடர்கிறது.
ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 படங்கள்: Birds of Passage (Colombia), The Guilty (Denmark), Never Look Away (Germany), Shoplifters (Japan), Ayka (Kazakhstan), Capernaum (Lebanon), Roma (Mexico), Cold War (Poland) and Burning (South Korea).
ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் இறுதிப்பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியிடப்படும். பிப்ரவரி 24 அன்று ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறவுள்ளது.