தற்போது ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் அமீர்கான், சமீபத்தில் சக நடிகையும், சினேகிதியுமான காத்ரீனா கைஃபுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபீ ஒன்றை, அவர்களுடன் அதே புகைப்படத்தில் இடம் பிடித்த இன்னொரு நடிகையான ஃபாத்திமா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தைக் கண்ணில் கண்ட மாத்திரத்தில் ரசிகர்கள் அமீர்கானின் உயரத்தைக் காரணமாக வைத்து அவரையும் காத்ரீனாவையும் ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலுமாகக் கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.
அமீரை விட காத்ரீனா உயரமானவர். ஆனால் புகைப்படத்தில் காத்ரீனா அமீரை விடக் குள்ளமாக இருப்பதைப் போல அந்தப் புகைப்படம் காட்டியது.
- ‘அதெப்படி அமீர், காத்ரீனாவைக் காட்டிலும் திடீரென உயரமானார்?!’
- ‘காத்ரீனா, நீங்கள் பார் இருக்கையில் உட்கார்ந்திருக்க வேண்டும் அல்லது அமீர் நின்று கொண்டிருக்க அவரது அருகில் நீங்கள் குனிந்து நின்று போஸ் கொடுக்கையில் இந்த புகைப்படம் எடுக்கப் பட்டிருக்க வேண்டும்?!’
- ‘புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் காட்சிகளையும் சேர்த்து பதிவிடுங்கள், பிறகு அமீரின் உண்மையான உயரத்தைக் கண்டுபிடிக்கலாம்’
- ‘அதெப்படி அமீர், காத்ரீனவைக் காட்டிலும் உயரமானவராக முடியும்?!
- ‘அமீரின் உயரம் திடீரென எப்படி இவ்வளவு அதிகரித்தது?!’
- ‘எங்களுக்குத் தெரியாதா அமீரின் உயரம்? இது ஒரு ஃபேக் புகைப்படம்!”
- ‘அடடா ... இந்தப் புகைப்படத்தில் காத்ரீனா முட்டி போட்டு அமர்ந்து எடுத்துக் கொண்டாரா? அமீர் எப்படி இத்தனை உயரமாக இருக்கிறார்?!’
என்பது மாதிரியான கமெண்ட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அத்தனை கமெண்ட்டுகளின் நோக்கமும் ஒன்றே!
பாலிவுட்டில் பொதுவாக நாயகிகள் அனைவருமே உயரமானவர்களே, அவர்களில் காத்ரீனா அனைவரைக் காட்டிலும் உயரமானவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இந்தக் கலாய்த்தலின் பொருள் உங்களுக்குப் புரியக் கூடும்.
சில நாட்களுக்கு முன்பு தமிழில் நடிகர் சூர்யாவைக் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இருவர் தங்களது நிகழ்ச்சிக்கான கமெண்ட்ரியில் இப்படித்தான் கலாய்த்திருந்தார்கள். சூர்யா ரசிகர்களிடமிருந்து அதற்கான கண்டனமும் கிளம்பியது. ரசிகர்கள் எல்லை மீறி விடக்கூடாது என்பதற்காக பின்னர் சூர்யாவே தனது அறிக்கை மூலம் ரசிகர்களைச் சாந்தப்படுத்திய பின் அந்தப் பிரச்னை ஓய்ந்தது.
இப்போது இது அமீர்கான் ரசிகர்களின் முறையாக இருக்கலாம். உயரத்தைக் காரணம் காட்டி தங்களது திறமையால் திரைத்துறையில் ஜெயித்துக் கொடி நாட்டிய நடிகர்களைக் கலாய்ப்பது நாகரீகமான செயலாக இருக்குமா எனத் தெரியவில்லை. நிச்சயம் சம்மந்தப்பட்டவர்களுக்கு மனம் புண்படத்தான் செய்யும்.