பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு சீமராஜா என்று அறிவிக்கப்பட்டது. முதல் தோற்ற போஸ்டரும் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்பில் அப்படம் உள்ளது. தற்போது 'சீமராஜா' படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்தப் படத்தைத் அடுத்து, சிவகார்த்திகேயன் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். டைம் ட்ராவல் என்ற வித்யாசமான கதைக் களனை தன் முதல் படமான 'இன்று நேற்று நாளை'யில் எடுத்து ரசிகர்களை பிரமிக்கச் செய்த இயக்குநர் ஆர். ரவிக்குமார், இந்தப் படத்தையும் புதிய கதையம்சம் கொண்ட படமாகவே இயக்கவிருக்கிறார்.
அதற்காகவே, இந்தப் படத்தின் கதையை எழுதி முடிக்கவும், கதை விஷயமாக சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக் கொண்டேன் என்று கூறினார் இயக்குநர் ரவிகுமார். இதன் மையக் கதை ஏலியன் எனப்படும் வேற்றுலகவாசிகள் பூமியை அழிக்க வருவதையும், அதைத் தடுக்க மனிதர்கள் என்ன முயற்சி செய்யவிருக்கிறார்கள் என்பதே ஆகும். முதல் முறையாக சிவ கார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்கை நடிக்க கேட்டிருக்கிறார்கள் .
ஹாலிவுட் படம் போல இந்தப் படத்திற்கு த்ரில்லுக்கு குறைவிருக்காது என்றனர் படக்குழுவினர். கம்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளை துல்லியமாகவும் தத்ரூபமாகவும் அமைக்க அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். மிகப் பிரமாண்டமாக எடுக்கப்படவிருக்கும் இந்தப் படம் தமிழில் மட்டுமின்றி இந்திய திரையுலகில்யே ஒரு புதிய முயற்சி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பிற நடிகர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தை பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.