மலையாள டி.வி சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சூர்யா சசிக்குமார் (36). இவரை கள்ள நோட்டு அச்சடித்து, விநியோகித்த குற்றத்திற்காக கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இக்குற்றத்திற்காக இவருடன் சேர்ந்து இவரது தாயார் ரெமா தேவியும், தங்கையும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வீட்டைச் சோதனையிட்டதில் அங்கு சுமார் 7 கோடி ரூபாய்க்கு 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் பணி அரைகுறையாக முடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுவரை அச்சடிக்கப்பட்ட சுமார் 57 லட்சம் ரூபாய்க்கான கள்ளநோட்டுக்களை இவர்களது வீட்டிலிருந்து கேரள காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கள்ள நோட்டுக் குற்றத்தில் தலைவியாகச் செயல்பட்டவர் சூர்யாவின் அம்மாவான 56 வயது ரெமா தேவி. கொல்லத்தில் இருக்கும் இவர்களது வீட்டின் மேல்தளத்தை கள்ள நோட்டு அச்சடிக்கும் பணிக்காக ஒதுக்கி அங்கு கள்ள நோட்டு அச்சடிப்புக்குத் தேவையான கம்ப்யூட்டர், ப்ரிண்டர், கலர் ஜெராக்ஸ் மெஷின்கள் இறக்கப்பட்டிருந்தன. கள்ள நோட்டு அச்சடிக்கும் குற்றத்தில் இவர்களுடன் இணைந்து செயல்பட்ட கிருஷ்ணகுமார், லியோ சாம் மற்றும் ரவீந்திரன் எனும் மூவர் முன்பே கைது செய்யப்பட்டு அவர்கள் அளித்த தரவுகளின் அடிப்படையில் நடிகையும் அவரது தாயாரும், சகோதரியும் தற்போது கைதாகியுள்ளதாகத் தகவல்.