பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் தமிழில் வெளியான இரும்புத்திரை பரவலான கவனம் பெற்று ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. டெக்னோ த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் திரைக்கதை டிஜிட்டல் இந்தியாவை கேள்விக்குட்படுத்தும் வகையில் பின்னப்பட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அண்மையில் இத்திரைப்படம் 'அபிமன்யுடு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியானது. படம் வெளியான நான்கு நாட்களில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
படத்தை பார்த்த டோலிவுட் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு இரும்புத்திரை படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், `அபிமன்யுடு படத்தை பார்த்து வியந்தேன். பி.எஸ்.மித்ரன் மிகத் திறமையாகவும் அறிவுபூர்வமாகவும் இப்படத்தின் கருத்தை திரையில் வடித்துள்ளார். திரைக்கதையும் வேகமாக அமைந்துள்ளது. விஷால் மற்றும் ஒட்டுமொத்த படக் குழுவினருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் இந்த மனம் திறந்த பாராட்டு படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.