அரசைக் கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்துள்ளது என்று நடிகர் பிரசன்னா ட்வீட் செய்துள்ளார்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி திரையிடப்பட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிடும் காட்சி போன்றவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமரிசிக்கும் காட்சிகள் மறு தணிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிற்பகல் முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாமல் தணிக்கைச் செய்யப்பட்ட புதிய வடிவம் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்ததாவது:
மன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வரலாறும், புலவர்கள் வஞ்சப்புகழ்ச்சி செய்த இலக்கியமும் தமிழில் உண்டு. அரசை கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்ததே! இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர் என்று கூறியுள்ளார்.