டிசம்பர் மாத ஆரம்பத்தில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் ஆகிய இருவருக்கும் ஜோத்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சிக்கு நடிகை பிரியங்காவும் பாடகர் நிக் ஜோனாஸும் ஒன்றாக வந்தது முதல் இருவரைப் பற்றிய கிசுகிசுக்கள் வர ஆரம்பித்தன. அதன்பிறகு பல இடங்களில் இருவரும் ஒன்றாகச் சுற்றுவது குறித்து அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில் இவர்களின் காதல் தற்போது திருமணப் பந்தமாக மலரவுள்ளது.
திருமணத்துக்காக பிரியங்காவின் காதலர் நிக் தற்போது இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். தில்லியில், தி ஸ்கை ஈஸ் பிங்க் என்கிற படத்தில் நடித்துவரும் பிரியங்கா, தனது காதலரை வரவேற்ற நிகழ்வை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். வெல்கம் பேபி என்றும் தனது காதலரைக் குறிப்பிட்டு சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ளார். நியூ யார்க்கிலிருந்து தான் இந்தியாவுக்குக் கிளம்பியதை உணர்த்தும் விதமாக நிக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க வழக்கப்படி கொண்டாடப்படும் தேங்க்ஸ்கிவிங் தினத்தை தில்லியில் இருவரும் கொண்டாடினார்கள். 28 பேர் கொண்ட இந்த நிகழ்வின் புகைப்படத்தையும் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.
இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் டிசம்பர் 2 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. எனினும் திருமணம் குறித்த அதிகாரபூர்வத் தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது.
பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக உள்ளார். கடந்த வருடம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்தது.