பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நடிகை த்ரிஷா!

அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு இருந்தாலும், சிருஷ்டி டாங்கேவிற்கு பெரிய திருப்பு முனை இல்லை. கடந்த 8 ஆண்டுக்கு முன் 'காதலாகி'
பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நடிகை த்ரிஷா!

அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு இருந்தாலும், சிருஷ்டி டாங்கேவிற்கு பெரிய திருப்பு முனை இல்லை. கடந்த 8 ஆண்டுக்கு முன் 'காதலாகி' படத்தில் அறிமுகமானவர் பின்னர் 'மேகா' படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் ரீ மிக்ஸான 'புத்தம் புது காலை' பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். வருடத்துக்கு 2 அல்லது 3 படங்களாவது நடித்து வரும் சிருஷ்டி டாங்கே, சமீபத்தில் திரைக்கு வந்த 'காலகூத்து' படத்தையடுத்து "பொட்டு' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து 'அர்ஜுனா' புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் புதுமுகம் விஜய் சந்தோஷ் கதாநாயகன். நாசர், பால சரவணன், சிங்கம் புலி, ராஜேந்திரன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழியில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜ் தொடங்கி வைத்தார். அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் சிருஷ்டி டாங்கே. 

அர்ஜுனா படம் தனது நடிப்பு முத்திரை பதிக்கும் படமாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார் சிருஷ்டி. ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சென்னை, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. டிசம்பர் மாத வெளியீடாக படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரிஷா நடிக்கும் புதிய படத்துக்கு 'பரமபதம் விளையாட்டு' என பெயரிடப்பட்டுள்ளது. நயன்தாரா பாணியில் தன்னை முன்னிறுத்தும் படங்களைத் தேர்வு செய்யும் திரிஷா இப்படத்தில் இரட்டை வேடம் ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி, "மருத்துவராகவும், மருத்துவரின் தாய் ஆகவும் இருவேடத்தில் திரிஷா இதில் நடிக்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்ஷனில் நடக்கிறது. இதுபோன்ற கதையில் திரிஷா முதன்முறையாக நடிக்கிறார். கதையைக் கேட்டவுடன் உடனே ஒத்துக்கொண்டார். கடினமான காட்சிகளில்கூட ஒரே டேக்கில் நடிக்கிறார். சரியானவற்றை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் சரியான ஒரு விஷயத்தை தவறான இடம் தவறான நேரத்தில் சொல்வதால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. திருப்பங்கள் நிறைந்த கதையாக இது உருவாகி வருகிறது'' என்கிறார் இயக்குநர் திருஞானம். இதில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரிஷ் இசையமைக்கிறார். 

**

தற்போது காதலர்களாக அறியப்படுகிற விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, அவ்வப்போது முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களுக்குச் சென்று வருவதுண்டு. கடந்த ஆண்டு ரோம் நாட்டுக்கு பயணமான இந்த ஜோடி, அங்குள்ள தேவலாயங்களுக்குச் சென்று வந்தனர். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது போல் அவ்வப்போது ஜோடியாக பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் அங்கு வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்களோடு சேர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிட்டனர். கோயில் மற்றும் தங்ககோபுரம் பகுதிகளில் நின்று புகைப்படங்கள் எடுத்தனர். இது குறித்த விடியோவை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தொடர்பான படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டிருக்கிறார். தற்போது தமிழகம் திரும்பியுள்ள நயன்தாரா தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கு கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.

**

நடிகைகளில் சிலர் தங்களது தோற்றத்தை அழகாகவும், ஒல்லியாகவும் பராமரிப்பதற்காக தங்களது வேலைகளில் ஒன்றாக எண்ணி உடற்பயிற்சி செய்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங் அழகாகவும், ஒல்லியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தவறாமல் உடற்பயிற்சி செய்பவர். இதுபற்றி அவர் விளக்கினார். வாரத்துக்கு 5 அல்லது 6 முறை நான் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். என் உடலில் வியர்வை சொட்டாவிட்டால் எனது மூளை வேலை செய்வதே நின்றுவிட்டதுபோல்தான் உணர்வேன். வழக்கமாக ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். பளு தூக்கவும் விரும்புவேன். அதுவும் அதிகபட்சமான வெயிட் தூக்குவேன். இதற்குமேல் செய்ய முடியாது என்று சோர்வு ஏற்படும் வரையில் அந்த பயிற்சி இருக்கும். அதனால் ஏற்படும் வலியை இன்பமாக உணர்வேன். எப்போதும் உடலுக்கு ஓர் அதிர்ச்சியை தந்து கொண்டே இருப்பேன். கடினமானதும், எனது எல்லைக்கு மீறியதாகவும் எதையும் செய்ய முயல்வேன்'' இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் கூறினார். லாரி டயர் ஒன்றை தரையிலிருந்து நிமிர்த்தி அதை நகர்த்தி செல்லும் பயிற்சி வீடியோவை ரகுல் வெளியிட்டுள்ளார்.

**

என் ஃபேஸ்' எனும் புதிய தொழில்நுட்பம் மூலம் எம்.ஜி.ஆர் நடிக்கவுள்ள படம் உருவாகவுள்ளது. மலேசியாவின் சர்வதேச ஊடக நிறுவனமான ஆரஞ்ச் கவுண்டி, இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு கடந்த கால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது. இந்திய திரையுலகில் தனது அபார ஆற்றலால் மிளிர்ந்த எம்.ஜி.ஆரை சர்வதேச திரைப்படத்தின் மூலமாக மக்கள் முன் மீண்டும் உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இதன் திரைக்கதையை இயக்குநர் பி.வாசு எழுதி இயக்குகிறார். ஹாலிவுட் பாணியில் சூப்பர் மேனாக எம்.ஜி.ஆர் இதில் வருகிறார். எம்.ஜி.ஆரின் பாவனைகள் கொண்டவர்கள் வைத்து, முகத்துக்கு மட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு எம்.ஜி.ஆரை இதில் கொண்டு வர இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் உருவாகவுள்ளது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com