உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவின் மனைவி கலாவதி பாய் (70) பெங்களூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலாவதிபாய்க்கு சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய் ஆகியவை இருந்ததால் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவுச் செய்தி அறிந்ததும் துயரடைந்த ரஜினி உடனடியாக பெங்களூரு விரைந்தார்.
தாயை சிறு வயதிலேயே இழந்த ரஜினியை வளர்த்தவர்கள் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மற்றும் அண்ணி கலாவதிபாய் தான். பெற்ற மகனைப் போல பாசத்துடன் அவரை கவனித்து வளர்த்தனர். ரஜினி தனது அண்ணன், அண்ணி ஆகியோரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னரே புதிய விஷயங்களில் ஈடுபடுவார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கலாவதிபாய்க்கு நேற்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு ராமகிருஷ்ணன், மகாதேவ், பாண்டுரங்கன், ஆகிய மூன்று மகன்களும் ராதாபாய் என்ற மகளும் உள்ளனர்.
அஞ்சலிக்காக அவரது உடல் பெங்களூரிலுள்ள ‘குருகிருபா’ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கலாவதிபாயின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடக்க உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.