சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் கதைத்திருட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது.
நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு இப்படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் மேயாத மான் படத்தில் நடித்த தமிழ்ப் பெண் இந்துஜாவும் இணைந்துள்ள தகவல் வெளியானது.
அவர் இந்தப் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடிக்கவுள்ளார். சென்னையின் புறநகர்ப் பகுதியில் கால்பந்து மைதானம் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் கதைத்திருட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வரும் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் கால் பந்தாட்டம் தொடர்பான கதை என்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.