சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ஒன்றில் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரிப் பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை, நிறுவனத்தின் உரிமையாளர் நடிகர் விஷால் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து வருமான வரித்துறை, நடிகர் விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், நடிகர் விஷால் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என சேவை வரித்துறை நடிகர் விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்த போது வருமான வரித்துறை அனுப்பிய சம்மன்கள் கிடைக்கவில்லை என்று விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் மனுவை விஷால் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் வருமான வரித்துறையால் தாக்கல் செய்யப்பட்டன.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் வழக்கு தற்போது ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.