ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த வசனம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் முதல் ரஜினி ரசிகர்கள் வரை பலரும் அந்தக் காட்சியைப் படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் தொடர்பாளர் முரளி அப்பாஸ், இந்த விவகாரம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோமாளி படத் தயாரிப்பாளரை கமல் ஹாசன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். ட்வீட்டில் அவர் கூறியுள்ளதாவது:
நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரெய்லரைப் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய விமரிசனத்தை பார்த்தவர், உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா, நியாயத்தின் குரலா என்று கூறியுள்ளார்.