உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை கண்டுகொள்வதில்லை. இப்படியான கதைத் திருட்டு தமிழ் சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'படைப்பாளன்'.
பிரபுராஜா, மனோபாலா, தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், "காக்கா முட்டை' ரமேஷ் - விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி நடிக்கின்றனர்.
சினிமாவில் இயக்குநராக துடிக்கும் ஓர் உதவி இயக்குநரின் கதை இது. முன்பெல்லாம் படத்தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு அவர்களை அலைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் பிரபலமான இயக்குநர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள். இந்த பின்னணியை அலசுவதுதான் கதை. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் விரைவில் திரைக்கு வருகிறது.