காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1 முதல் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய நாடுமுழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தருகிறார்கள். அத்திவரதர் பெருவிழாவின் 47-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினருடன் வந்து நேற்று நள்ளிரவில் அத்திவரதரைத் தரிசனம் செய்தார். கோயில் பட்டாச்சாரியார்கள் நயன்தாராவுக்கு அத்திவரதர் திருவுருவப்படமும், கோயில் பிரசாதமும் வழங்கினார்கள். இதன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.