பெரிய இயக்குநர்கள் அவர்களுடைய படங்களுக்கு என்னைத் தேர்வு செய்வதில்லை என பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆதங்கப்பட்டுள்ளார்.
குட் நியூஸ் என்கிற தனது படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அக்ஷய் குமார் பேசியதாவது:
நான் புதிய இயக்குநர்களுடன் பணிபுரிவதற்குக் காரணம், பெரிய இயக்குநர்கள் அவர்களுடைய படங்களுக்கு என்னைத் தேர்வு செய்வதில்லை என்பதால் தான். அதுதான் உண்மை. பெரிய இயக்குநர்கள் உங்களைத் தேர்வு செய்யாதபோது, உங்களுடைய பயணத்தை நீங்கள் தான் தொடங்கியாக வேண்டும். பெரிய நிறுவனங்களில் உங்களுக்கு வேலை கிடைக்காவிட்டால், சிறிய நிறுவனங்களில் முதலில் பணிபுரிந்து பிறகு பெரிய நிறுவனங்களுக்குச் செல்வீர்கள். திறமையிருந்தும் நம்மை ஏன் பெரிய இயக்குநர்கள் தேர்வு செய்வதில்லை என வீட்டில் உட்கார்ந்திருக்க முடியாது.
கான்களிடம் மட்டும் பெரிய இயக்குநர்கள் பணிபுரிய விருப்பப்படுகிறார்களா எனக் கேட்கிறீர்கள். யார் தகுதியானவர்களோ அவர்களிடம் பெரிய இயக்குநர்கள் பணிபுரிகிறார்கள். பாலிவுட்டில் கான்கள் மட்டுமல்ல, கபூர்கள் மற்றும் இதர நடிகர்களும் உள்ளார்கள். எனக்குத் தகுதியில்லை என எண்ணிக்கொள்வதால் எனக்கான வழியை நானே தேடிக்கொள்கிறேன்.
பெரிய இயக்குநர்கள் படங்களைத் தயாரிக்கும்போது மட்டும் என்னை அழைக்கிறார்கள். அப்போதும் அவர்கள் இயக்கும் படங்களுக்கு என்னைத் தேர்வு செய்வதில்லை. இந்த விழாவுக்கு வந்துள்ள கரண் ஜோஹரிடம் கேளுங்கள், ஆதித்ய சோப்ராவிடம் கேளுங்கள். குட் நியூஸ் படத்தின் அறிமுக இயக்குநர், ராஜ் மேத்தா என்னுடைய 21-வது புதிய இயக்குநர்.
பட இயக்கத்தில் புதிய இயக்குநர்களுக்கு நான் எதுவும் சொல்லித் தர மாட்டேன். நான் பள்ளிக்கூடம் ஒன்றும் திறக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு வந்து அவர்கள் வேலையைச் செய்வார்கள். கதை, திரைக்கதையை அதிகம் நான் நம்புவேன். அதிலேயே உங்களுடைய 60 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துவிடும். இதர வேலைகளை இயக்குநர்கள் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.
குட் நியுஸ் படம், டிசம்பர் 27 அன்று வெளிவரவுள்ளது. கரீனா கபூர், தில்ஜித், கியாரா அத்வானி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.