பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது வீண் பழி சுமத்துவதாக நடிகை ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டுகளுக்கு அவருடைய கணவர் ஈஸ்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வம்சம் தொடரில் வில்லியாக நடித்துப் புகழடைந்தவர் நடிகை ஜெயஸ்ரீ. நடிகர் ஈஸ்வரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தன்னிடமுள்ள பணம், நகைகளை அபகரித்துக்கொண்டார். இதனால் குழந்தையுடன் தவித்து வருவதாக கணவர் ஈஸ்வர் மீது சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் நடிகை ஜெயஸ்ரீ.
மூன்று ஆண்டுகளுக்குத் தன்னைத் திருமணம் செய்த ஈஸ்வர், தன்னைக் கொடுமைப்படுத்தி வந்தார். வேறொரு நடிகையுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததை நான் கண்டுபிடித்ததால் சித்ரவதை அதிகமானது என்று தன் கணவர் மீது குற்றம் சுமத்தினார் ஜெயஸ்ரீ. இதையடுத்துக் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஈஸ்வர், தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிறகு, சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஈஸ்வர். அவர் கூறியதாவது:
குழந்தையை நான் தான் வளர்த்து வருகிறேன். நான் தவறு எதுவும் செய்யவில்லை. பணம் பறிக்கும் நோக்கத்தில் என் மீது வீண் பழி சுமத்துகிறார். எங்களுடைய வீட்டில் இருந்த என் பெற்றோரை விரட்டி விட்டு அந்த வீட்டில் ஜெயஸ்ரீ குடியிருந்து வருகிறார். எனக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு கிடையாது. வீணாக ஜெயஸ்ரீ அவதூறு பரப்புகிறார் என்று கூறியுள்ளார்.