ரஜினி படத்துக்காக மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனிலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கவுள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத் குமார், அஸ்வின், ஆதி, லால் போன்றோர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரிக்கவுள்ளன. ஒளிப்பதிவு - ரவி வர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், பாடல்கள் - வைரமுத்து. முதற்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெண்குயின் என்கிற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ரஜினி நடிப்பில் சிவா இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கத் தாமதமானதால் தேதிகள் பிரச்னை காரணமாக மணி ரத்னத்தின் கனவுப் படத்திலிருந்து விலகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் தலா இரு படங்கள், அஜய் தேவ்கனுடன் இணைந்து நடிக்கும் ஹிந்திப் படம் என வரிசையாகப் படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் மணி ரத்னம் கேட்ட தேதிகளை வழங்க முடியாத நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அப்படி, மணி ரத்னத்தின் வேண்டுகோளை ஏற்று பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் ரஜினி படத்தில் நடிக்க முடியாமல் போகும் என்கிற நிலைமையும் ஏற்பட்டது. இந்நிலையில் பொன்னியின் செல்வனிலிருந்து விலகி, ரஜினி - சிவா படத்தில் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.