தெற்கு தில்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு அருகே உள்ள பிரண்ட்ஸ் காலனியில் மாணவா்கள் கூடி போராட்டம் நடத்தினா். அப்போது, திடீரென போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 4 டிடிசி பேருந்துகளும், 2 போலீஸ் வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறைக்கு தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் தான் காரணம் என்று தில்லி போலீஸார் குற்றம் சாட்டினர். கலவரம் வெடித்ததும், ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் காவலர்கள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள், பணியாளர்களைத் தாக்கி வெளியேற்றியதாக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் காவலர்கள் மாணவர்களைத் தாக்குவதைக் கேலி செய்யும் விடியோவை ட்விட்டர் தளத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் லைக் செய்தார். இதைக் கண்டு சமூகவலைத்தளங்களில் பலரும் அக்ஷய் குமாருக்கு எதிராகப் பதிவுகளை எழுதினார்கள். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார் அக்ஷய் குமார். அவர் கூறியதாவது:
ஜாமியா மிலியா மாணவர்கள் ட்வீட்டுக்கு நான் லைக் செய்தது குறித்த என் விளக்கம். அதை நான் தவறாக லைக் செய்துவிட்டேன். நான் ட்விட்டரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது தெரியாமல் லைக் செய்துள்ளேன். இதை அறிந்தவுடன் உடனடியாக அன்லைக் செய்துவிட்டேன். இதுபோன்ற செயல்களை நான் எப்போதும் ஆதரிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.