காதல் மற்றும் பிரிவு பற்றி மனம் திறந்து பேசிய ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய கருத்துக்களை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படையாக பேசும் இயல்புடையவர்
காதல் மற்றும் பிரிவு பற்றி மனம் திறந்து பேசிய ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய கருத்துக்களை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படையாக பேசும் இயல்புடையவர்.  அதனாலேயே பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார். மைக்கேல் கோர்சலேவுடனான பிரிவு முதல் தனது பெற்றோரின் விவாகரத்து வரை பல விஷயங்களை அண்மையில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

காதல் அல்லது திருமண உறவு கசந்துவிட்டால், அதில் உழன்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதன்பின் அந்த இரண்டு தனிப்பட்ட நபர்களும் அவரவர் மகிழ்ச்சியைக் கண்டறிவதுதான் முக்கியம் என்றார்.  தனது பெற்றோரின் பிரிவைப் பற்றி குறிப்பிடுகையில், இது மற்றவர்களுக்குத்தான் “செய்தி” ஆனால் தங்கள் குடும்பத்துக்கு அல்ல.  சந்தோஷமாக இருப்பதற்கு தகுதியான அற்புதமானவர்கள் அவர்கள் என்பதால் இருவரும் பிரிந்ததில் தான் "மகிழ்ச்சியாக" இருப்பதாகக் கூறினார் ஸ்ருதிஹாசன். கமலும் சரிகாவும் தனக்கு பெற்றோர்களாக இருப்பதற்கு முன்பே தனிப்பட்ட விருப்பு வெறுப்புடைய நபர்கள் என்று அவர் மேலும் கூறினார். ஒருவருடன் மற்றவர் ஒத்துவராத நிலையில், விஷயங்களைச் சரி செய்ய முயற்சிப்பதை விட, பிரிந்திருப்பதே நல்லது என்றார்.

தற்போது இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கி வரும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். இதில் உலகம் முழுதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கிளாரா என்ற பெயருடைய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிராமத்தை மேம்படுத்த விஜய்சேதுபதி எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் முக்கியமான கதாபாத்திரம் அது என்றார்.

உணவுக் கட்டுப்பாடு பற்றிக் கூறுகையில், “ஆரோக்கியமான உடல் மிகவும் முக்கியம். வெளி உலகத்தில் போராடி ஜெயிக்க உங்களுக்கு ஆரோக்கியமான உடலும் ஆரோக்கியமான மனமும் தேவை. நீங்கள் உள்ளே ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உங்களால் உலகிற்கு சவால் விட முடியாது,” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com