காற்று வெளியிடை படத்துக்காக இந்திய விமானப் படை விமானிகளைச் சந்தித்தது குறித்து நடிகர் கார்த்தி

இந்திய விமானப் படையைச் சேர்ந்த பல விமானிகளைச் சந்தித்ததை என் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்...
காற்று வெளியிடை படத்துக்காக இந்திய விமானப் படை விமானிகளைச் சந்தித்தது குறித்து நடிகர் கார்த்தி

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில்  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்தன. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், விமானி ஒருவரைப் பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் விமானி அபிநந்தன் மாயமானதாக இந்திய தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.  பாகிஸ்தான் பிடியில் விமானி அபிநந்தன் உள்ளது உண்மைதான் என்று  வெளியுறவுத்துறையும்  உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பனமூரைச் சேர்ந்தவர். அபிநந்தனின் பெற்றோர் சென்னை  சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். 

தாம்பரம் விமானப்படை மையத்தில் பயிற்சி பெற்ற அபிநந்தன் கடந்த 2004 முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.  தற்போது பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள அபிநந்தனின்  நிலை குறித்து உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். அவரைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அபிநந்தன்  தந்தை ஏர்மார்ஷல் எஸ்.வர்த்தமான் கிழக்கு பிராந்திய விமானப்படை ஏர் ஆபீசர் கமாண்டிங் இன் சீப் ஆக ஷில்லாங்கில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிராஜ் 2000 போர் விமானத்தை மேம்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது தாயார் மல்லிகா. இவரும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் திருமலை நகர் ஜல்வாயு விஹார் விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகின்றனர். வர்த்தமான் இந்திய விமானப்படை அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவராகவும் உள்ளார்.  சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெம்பாக்கத்தை அடுத்த திருப்பனமூர். 

அபிநந்தனின் தாத்தா சிம்மகுட்டி இந்திய விமானப் படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். அவரது தந்தை வர்தமான் பிரான்ஸ் நாட்டில் விமானியாக வேலை பார்த்துவிட்டு, பின்னர் இந்திய ராணுவத்தில் விமானியாக பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து அபிநந்தனும் இந்திய விமானப் படையில் விமானியாக சேர்ந்தார். அபிநந்தனின் குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக விமானப் படையில் விமானிகளாக இருந்து நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அபிநந்தனின் தந்தை வர்த்தமான், மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்துக்கு ஆலோசகராகச் செயல்பட்டுள்ளார். அந்தப் படத்தில் இந்திய விமானப்படை விமானியாக நடிகர் கார்த்தி நடித்திருப்பார். இந்நிலையில் தற்போதைய சூழல் குறித்து கார்த்தி ட்விட்டரில் கூறியதாவது:

இந்திய விமானப் படையைச் சேர்ந்த பல விமானிகளைச் சந்தித்ததை என் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவர்களைப் பற்றி அறிந்துகொண்டது உண்மையிலேயே மரியாதைக்குரியது. அவர்கள் விசேஷ வகையைச் சேர்ந்தவர்கள். நம் விமானிகள் பத்திரமாகத் திரும்பவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். நம் ராணுவ வீரர்களின் பின்னால் ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது. அவர்களின் தைரியமான உள்ளமும் தியாகமுமே நம்மைப் பாதுகாப்பாக வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com