தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (வியாழக்கிழமை) தமிழில் வெளியாகியுள்ளது.
கடந்த 2004 முதல் 2008 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடகத் துறை ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு எழுதிய, 'தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்' புத்தகத்தை தழுவி 'தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டிரெய்லரில் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸின் உட்கட்சிப் பிரச்னைக்கு மன்மோகன் சிங் பலியாகிவிட்டார் என்பது போன்ற பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, இந்த டிரெய்லருக்கு தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், தில்லி உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் டிரெய்லர் இன்று தமிழில் வெளியாகியுள்ளது.
விஜய் ரத்னாகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார்.