ஓபனிங் சீனுக்கு மட்டுமே 15 கோடி, 25 கோடியா?! அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கக்கூடும் அந்த ஓப்பனிங் சீன்களில் என்று தானே தோன்றுகிறது. நிச்சயம் ஏதோ ஸ்ப்ஷல் இருக்கத்தான் போகிறது என்பதற்கு உத்தரவாதமுண்டு காரணம் படத்தில் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி. படம் 15 கோடி ரூபாய் செலவில் ஓப்பனிங் சீன் வைக்கப்படவிருப்பது நடிகர் ராம் சரண் தேஜாவிற்காக. 25 கோடி ரூபாய் ஓப்பனிங் சீன் வைக்கப்படவிருப்பது ஜூனியர் என் டி ஆருக்காக. இவர்கள் இருவருமே இந்தப் படத்தில் ஆந்திர விடுதலைப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராமா மற்றும் கோமரம் பீம் எனும் இருவரது வாழ்க்கைக் கதைகளைப் பிரதிபலிக்கவிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமே படத்தில் தனித்தனியாக ஓப்பனிங் சீன்கள் உண்டு. அதற்காகத்தான் மேற்கண்ட பெருந்தொகை செலவிடப்படவிருக்கிறது.
இதை அந்த நடிகர்களின் ஸ்டார்டம்முக்குச் செலவிடும் தொகையாகக் கருதுவதைக்காட்டிலும் அவர்கள் ஏற்று நடிக்கவிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களது உருவத்தை மக்கள் மனதில் ஆழப்பதிக்கும் முயற்சியாகக் கருதி அவர்களுக்கு ராஜமெளலி செலுத்தும் மரியாதையாக இதைக் கருதலாம் என்கின்றனர் படக்குழுவினர்.
படத்தில் ராம்சரண் ஏற்று நடிக்கவிருக்கும் அல்லூரி சீதாராமா கதாபாத்திரத்துக்கு அலியா பட் ஜோடி. 1900 ஆம் ஆண்டுகளில் வசித்த தெலுங்குப் பெண்களின் உருவத்தையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கவிருக்கிறார் அலியா பட். தற்போது ஒரு வார காலம் ராஜமெளலி அயல்நாட்டுக்குப் பறந்து விட்டதால் ஹீரோக்களுக்கு விடுமுறை கிடைத்து அவரவர் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். கூடிய விரைவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் எஞ்சிய காட்சிகள் விரைவாகப் படமாக்கப்படும் என்கிறார்கள் படக்குழுவினர். இத்திரைப்படத்தில் அல்லூரி சீதாராமாவாக நடிக்கவிருக்கும் ராம்சரணின் தந்தையாக இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.