அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் குழு இன்று (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு அறிவித்துள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை படக்குழுவினர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டனர்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிகில் படம் குறித்த அடுத்த அறிவிப்பு வெளியாகும் என்று படத் தயாரிப்பாளர்கள் குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணி அந்த அறிவிப்பானது வெளியானது.
அதன்படி, பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'வெறித்தனம்' என்ற பாடலை விஜய் பாடுகிறார். ஏற்கெனவே, மெர்சல் படத்தில் ரஹ்மான் இசையில் விஜய் பாடாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த ஏமாற்றத்தை, பிகில் படக்குழுவினர் இந்த படத்தில் பூர்த்தி செய்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து வெறித்தனம் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.