மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து இயக்கியுள்ள படம் - ஆடை. ஜூலை 19 அன்று வெளிவருகிறது. அமலா பால் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது இப்படம்.
இந்நிலையில் ஃபிலிம்கம்பேனியன் செளத் இணையத்தளத்துக்குப் பேட்டியளித்த அமலா பால், தன்னுடைய காதலரிடம் ஆடைப் படக் காட்சிகள் குறித்து விவாதித்ததாகக் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
நான் இப்போது காதல் உறவில் உள்ளேன். ஆடை கதையைக் கேட்டபோது அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் என்னிடம் முதலில் சொன்னது, நான் முதலில் இதற்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் 100 சதவிகிதம் தயாராகவேண்டும் என்று கூறினார்.
நான் தற்போது மாறியதற்கும் என் வேலை குறித்த பார்வைக்கும் அவரே காரணம். தாயால் மட்டும் நிபந்தனையற்ற அன்பை வழங்கமுடியும், எல்லாவற்றையும் தியாகம் செய்யமுடியும் என எண்ணியிருந்தேன். ஆனால் தன்னாலும் அவற்றைச் செய்யமுடியும் என எனக்கு அவர் நிரூபித்துள்ளார். தன்னுடைய வேலையை எனக்காக விட்டுவிட்டார். சினிமா மீதான என்னுடைய ஆர்வத்தை அவர் அறிவார். அதற்காக என்னை எப்போதும் பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார். என் படங்களைப் பார்த்துவிட்டு, நான் ஒரு மோசமான நடிகை என்று குறிப்பிட்டார். என்னுடைய மூன்றாம் கண்ணைத் திறந்தவர் அவர்தான். பாதுகாப்பற்ற சூழலில் நடிகர்கள் உள்ளதால் தன்னைப் பாராட்டும் நபர்களையே அருகில் வைத்திருப்பார்கள். நானும் அப்படித்தான். என்னைச் சுற்றி உள்ளவர்கள் உண்மை நிலையைச் சொல்வதில்லை. அவர்தான் பிறகு என் வாழ்வில் வந்து, என் குறைகளைக் கிழித்தெடுத்தார். என் வாழ்வின் உண்மை அவர்தான் என்று கூறியுள்ளார்.
2014-ல் நடிகை அமலா பாலை இயக்குநர் விஜய் திருமண செய்த நிலையில் இருவரும் 2017-ல் விவாகரத்து செய்துகொண்டார்கள். சமீபத்தில் இயக்குநர் விஜய்க்குத் திருமணம் நடைபெற்றது.