நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் வகைத் திரைப்படம் 'கொலையுதிர் காலம்'. தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் தமிழில் நயன்தாரா, ஹிந்தியில் தமன்னா நடித்துள்ளனர்
தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று புகழப்படுபவர் நடிகை நயன்தாரா. பல்வேறு விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று திறம்பட நடித்து வருகிறார்.
கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' மற்றும அஜித்தின் 'பில்லா - 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் 'கொலையுதிர் காலம்” என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜூன் 14-ம் தேதி ரிலீஸுக்குத் தயாரான நிலையில் கொலையுதிர் காலம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு ஒன்று தொடரப்பட்டதைத் தொடர்ந்து படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி 'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பு காப்புரிமை சட்டத்தில் பதியப்படவில்லை. அதனால் இந்தத் தலைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜூலை 26-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.