சமீபகாலமாக, கதாநாயகி வேடத்தைப் பிரதானமாகக் கொண்ட படங்களில் நயன்தாராவும் ஜோதிகாவும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், ஜோதிகா நடித்த ஜாக்பாட் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில், ஆகஸ்ட் 2 அன்று வெளிவரவுள்ளன.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் - கொலையுதிர் காலம். இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா போன்றோரும் நடித்துள்ளார்கள். தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது. விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள நான்காவது தமிழ்ப் படம் இது.
குலேபகாவலி, காத்தாடி படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விஷால் சந்திரசேகர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. திருமணமாகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஜோதிகா. இதன்பிறகு அவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் அவர் நடித்த நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்கள் வெளிவந்தன. சமீபத்தில் ஜோதிகா நடித்த ராட்சசி படம் வெளிவந்தது. உடனடியாக அடுத்தப் படமான ஜாக்பாட்டின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதுதவிர கார்த்தி நடிக்கும் படம், பொன் மகள் வந்தாள் என இரு படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.
இந்த வாரம் பல படங்களில் வெளிவரவுள்ள நிலையில் ஒரே நாளில் ஜோதிகா - நயன்தாரா நடித்த படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.