பெண்களை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என்று அறிவித்த பிக் பாஸ்: மன்னிப்பு கோரிய நடிகர் சரவணன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொலைக்காட்சியும் பெண்களை இழிவு செய்வதையோ அவமரியாதை செய்வதையோ ஏற்றுக்கொள்ளாது...
பெண்களை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என்று அறிவித்த பிக் பாஸ்: மன்னிப்பு கோரிய நடிகர் சரவணன்!

கடந்த சனியன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சரவணன். 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் சனியன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் - நடிகை மீரா மிதுன் தொடர்புடைய விவாதம் ஒன்று நடைபெற்றது. அப்போது மீராவுக்கு அறிவுரை வழங்கிய கமல், இப்படிப் பார்த்தால் பேருந்துகளில் நெரிசலில் போகவே முடியாது. அங்கு யாரும் வேண்டுமென்று இடிக்கமாட்டார்கள். (அதேசமயம்) பெண்களை உரசுவதற்கென்றே பேருந்தில் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள் என்றார். 

அப்போது நடிகரும் போட்டியாளர்களில் ஒருவருமான சரவணன் கையைத் தூக்கினார். உடனே கமல், அத்தகையவர்களை சரவணன் பிடித்து நாலு போடு போட்டிருப்பார் என நினைக்கிறேன் என்றார். ஆனால் சரவணன், நான் கல்லூரியில் படிக்கும்போது அதைச் செய்துள்ளேன் என்றார். 

கமலும் அரங்கில் இருந்த பார்வையாளர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. ஐயய்யோ என்றார் கமல். சரவணனின் பேச்சுக்கு பெண்கள் உள்ளிட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். அதையும் தாண்டி அவர் புனிதம் ஆயிட்டார் என்றார் கமல். 

பேருந்துகளில் பெண்களை உரசும் செயல்களைக் கல்லூரிக் காலங்களில் தான் செய்துள்ளதாக சொன்ன சரவணனின் பேச்சை கமல் கண்டிக்காதது ஏன்? சரவணனின் பேச்சுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தது ஏன்? இது நடந்தாலும் அந்தச் சம்பவத்தை விஜய் தொலைக்காட்சி அப்படியே ஒளிபரப்பியது ஏன் என்கிற கேள்விகளைச் சமூகவலைத்தளங்களில் பலரும் எழுப்பினார்கள். 

கடந்த சனியன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சரவணன். நேற்றைய நிகழ்ச்சியில் அவர் வருத்தம் தெரிவிக்கும் காட்சி ஒளிபரப்பானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொலைக்காட்சியும் பெண்களை இழிவுபடுத்துவதையோ அவமரியாதை செய்வதையோ ஏற்றுக்கொள்ளாது. கமல் சார் முன்பு அப்படிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சரவணனிடம் பிக் பாஸ் நிர்வாகம் கட்டளையிட்டது. இதற்கு சரவணன் பதில் அளித்ததாவது:

கமல் சார் கேட்டபோது நானும் அதுபோல தவறு செய்துள்ளேன் என்று சொல்வதற்காகக் கையைத் தூக்கினேன். கல்லூரிக் காலங்களில் நிறைய சின்னச் சின்ன தவறுகள் செய்துள்ளேன். யாருமே அதுபோல செய்யாதீர்கள் என்று சொல்வதற்காக முயன்றேன். ஆனால் அந்தச் சூழலில் சொல்லமுடியவில்லை. யாரும் வருத்தப்படும்படியாக நான் எதுவும் சொல்லவில்லை. நான் சிறுவயதில் தவறுதலாகச் செய்தேன். அதுபோல சிறுவயதில் யாரும் தவறு செய்யாதீர்கள். நான் செய்தது தவறு என்பதைச் சொல்வதற்காகத்தான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன். என்னைப் போல யாரும் தவறு செய்யாதீர்கள். தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன். யாருக்காவது மனவருத்தம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள். யாருமே அதுபோல செய்யக்கூடாது என்பதற்காகத்தான் கையைத் தூக்கினேன் என்று விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com