2009-ம் ஆண்டு வெளிவந்த படம் அவதார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகளவில் 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது. இதையடுத்து, அவதார் 2 படம் டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அவதார் என்கிற தலைப்பேயே ஜேம்ஸ் கேம்ரூனுக்கு நான் தான் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜேம்ஸ் கேம்ரூனுக்கு அவதார் என்கிற தலைப்பை நான் தான் கொடுத்தேன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படம் நன்றாக ஓடும், ஆனால் படத்தை முடிக்க உங்களுக்கு ஏழு ஆண்டுகளாகும் என்றேன். அவர் கோபமடைந்தார். ஏழு வருடம் வரை அவதார் படத்தை முடிக்காமல் இருப்பேன் என எப்படிக் கூறுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். முடியாத ஒன்றைக் கற்பனை செய்கிறீர்கள் என்றேன். அவதார் என்று தலைப்பு வைத்துவிட்டு வேற்றிக்கிரகவாசியைக் காண்பித்துள்ளார்.
என்னை நடிக்க அழைத்தார். 410 நாள்கள் கால்ஷீட் கேட்டார். உடம்பு முழுக்க பெயிண்டிங்கைப் பூசிக்கொண்டு என்னால் நடிக்கமுடியாது. எனவே முடியாது என்றேன். என்றாலும் நான் சொன்னதுபோல படம் பெரிய வெற்றியை அடைந்தது என்று கோவிந்தா கூறியுள்ளார்.
ஜேம்ஸ் கேம்ரூன் படம் வெளிவந்தபிறகு 2012-ல் அவதார் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்தார் கோவிந்தா. ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.