விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் "தமிழரசன்' படத்துக்காக இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடினார்.
எஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனம் தயாரித்து வரும் "தமிழரசன்' படத்துக்காக இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி. ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்காக இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் இணைந்துள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இப்படத்துக்கான பாடல் பதிவு சனிக்கிழமை நடந்தது. இதில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடினார்.
இது குறித்து படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் கூறும்போது, "சில அதிசயங்கள் கலையால் மட்டும்தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக் கலை நிகழ்த்தி இருக்கிறது. விஜய் ஆண்டனி நடித்து வரும் "தமிழரசன்' படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
அவரது இசையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜேசுதாஸ் இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிச் சென்றார்.
பலரும் இந்த நிகழ்வை ஆச்சரியமாக கொண்டாடி வந்தவேளையில், இளையராஜாவின் இசையில் இப்போது இந்தப் படத்துக்காக எஸ்.பி.பி., ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார்.
சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி. குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது.
அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமுகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் பதிவின்போது இருவரும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டனர். கவிஞர் பழனிபாரதி எழுதியிருக்கும் "வா வா என் மகனே' எனும் இந்தத் தாலாட்டுப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குநர்.