இயக்குநர் அருண்குமார் - நடிகர் விஜய் சேதுபதி மூன்றவாது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சிந்துபாத். அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா, விஜய் சூர்யா (சேதுபதியின் மகன்) உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்சியில் விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், 'அருண் குமார் வாழ்க்கையில் இடம் பெறக் கூடிய அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலி. பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண். பின்னர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் பிறர் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
சினிமாவில் தொடங்கிய எங்களின் நட்பு தற்போது அருணை எனது குடும்ப நண்பராக மாற்றியுள்ளது. அதனால்தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இதில் நான் நடிக்காவிட்டாலும் எனது மகன் சூர்யா நடித்திருப்பார். ஏனெனில் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் இது பற்றி என்னிடம் கூறியிருந்தார்.
சிந்துபாத் படத்தில் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த கதைதான் உள்ளது. இதில் இருக்கும் ஏராளமான சுவராஸ்யமான காரணிகளை விவரித்தால் அது நாளை தலைப்பு செய்தியாகிவிடும். ஒருவனுடைய மனைவியை, ஒரு கும்பல் கடத்திச் சென்று, கடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவனானவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. இந்த படத்தில் அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களும் கதைக்கான தூண்களாக நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் நாயகனுக்கு காது மந்தம் என்பதால் சத்தமாக பேசினால்தான் கேட்கும். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக் கூடிய நபர் என்பதால் அவர் இந்த கேரக்டரில் பொருத்தமாக நடித்திருந்தார். படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கிளைமாக்ஸ் போலிருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை எந்த சூழலிலும் இடையூறு ஏற்படுத்தாத, நம்பகத்தன்மைமிக்கதாக இருக்கும். அவருடைய இசையை கேட்கும்போது, நம்முடைய இசை கேட்பது போல் இருக்கும்’ என தெரிவித்தார்.