தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 69 பேர் போட்டி களத்தில் உள்ளனர். இரு அணியினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தை பாக்யராஜ் அணியினர் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கேட்டனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றவர்கள் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், பாக்யராஜ் அணியினர் நடிகர் கமலஹாசனை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
பிறகு செய்தியாளர்களிடம் பாக்யராஜ் பேசியதாவது:
யாராக இருந்தாலும் நடிகர் சங்கக் கட்டடம் நல்லபடியாக வர வேண்டும். அதுதான் என்னுடைய எண்ணம். நடிகர் சங்க கட்டடத் திறப்பு விழாவிற்குத் தன்னை அழையுங்கள் என கமல் கூறினார் என்று பேசினார்.