நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: நீதிமன்றத்தில் விஷால் மனு!

நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனு செய்துள்ளார்... 
நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: நீதிமன்றத்தில் விஷால் மனு!

நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனு செய்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாசர், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கே.கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும்  தேர்தலை எதிர்கொள்கின்றன. இதற்காக இரு அணியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலையொட்டி, புதுக்கோட்டையில் முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களிடம் வாக்கு கோரும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த நாசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். தேர்தலுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு அளிக்க கோருவோம் என்றார். வரும் 23 அன்று எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரச்னை ஏற்படாமலிருக்க எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் காவல்துறை கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் விஷால். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ள நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தன்னுடைய மனுவில் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com