திரைப்படம், எழுத்து உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்காக வழங்கப்படும் கலைமாமணி விருதுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. கடந்த 2011 முதல் எட்டு ஆண்டுகளுக்கு 201 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், சான்றிதழும் அடங்கியது. ரூ.1 லட்சம் காசோலையுடன் சான்றிதழும் அடங்கிய பாரதி, பாலசரஸ்வதி விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
2015-ம் ஆண்டுகான கலைமாமணி விருது நாடக நடிகர் பிரிவில் மாது பாலாஜிக்கு வழங்கப்படவுள்ளது. இதையடுத்து தனது சகோதர் மாது பாலாஜியைப் பாராட்டி ஃபேஸ்புக்கில் பிரபல நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகன் எழுதியதாவது: மேடை நாடகங்களில் 40 வருடங்கள். இந்தியாவின் சிற்றூர்கள் உள்பட உலகம் முழுக்க 6500 நாடகங்கள், கிரேஸி கிரியேஷன்ஸில் ஒரு மேடை நாடகத்தைக்கூடத் தவறவிட்டதில்லை, 1000-க்கும் அதிகமான தொலைக்காட்சித் தொடர்களின் பாகங்கள், படங்கள், விளம்பரங்களிலும் நடித்துள்ளார்... அதிக வருவாய் கொண்ட சினிமாவை மேடை நாடகங்களுக்காகத் தியாகம் செய்தார்... நிச்சயம் இந்த விருதுக்கு உரியவர் என்று பாராட்டியுள்ளார்.