தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் இந்திய ராணுவத்தில் கடந்த 17 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.
விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த தமிழ்செல்வனுக்கு இந்திய எல்லையில் பதற்றம் நிலவுவதால் பணிக்குத் திரும்பும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்பது தமிழ்செல்வனின் நீண்டநாள் ஆசை. அவருடைய நிலையை அறிந்த தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பாண்டியன், நடிகர் விஜய்யிடம் இத்தகவலைத் தெரிவித்தார். தன்னுடைய ரசிகர் ஒருவர் ராணுவ வீரராகப் பணியாற்றுவதை அறிந்த விஜய் உடனே தமிழ்செல்வனைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உங்களுக்கு எதுவும் ஆகாது, வெற்றியுடன் திரும்புவீர்கள். நீங்கள் திரும்பி வந்தவுடன் உங்களைச் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.
விஜய்யின் வாழ்த்துகளோடு மகிழ்ச்சியுடன் காஷ்மீர் செல்ல உள்ளேன். விஜய் என்னிடம் தொலைப்பேசியில் பேசுவார் என்பதை எதிர்பார்க்கவில்லை. நான் வெற்றியுடன் திரும்பி வந்தபிறகு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வேன் என்று இதுகுறித்து விடியோ வெளியிட்டுள்ளார் தமிழ்செல்வன்.