கே.சி. சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜூலை காற்றில். இசை - ஜோஸ்வா ஸ்ரீதர்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தியிடம் வேடிக்கையாக செல்ஃபி எடுக்க முயன்றார் நடிகை கஸ்தூரி... அதைத் தவிர்த்துவிட்டு மேடையில் கார்த்தி பேசியதாவது:
ஒருவருடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுக்க அனுமதி வாங்கிக்கொண்டுதான் எடுக்கவேண்டும் என்கிற மரியாதையே இல்லாமல் போய்விட்டது. செல்போனில் பின்னாடி ஒரு பிளாஷ், முன்னாடி ஒரு பிளாஷ் உள்ளது, மைக்ரேன் தலைவலி உள்ளவன் என்ன ஆவான்? ஒரு செல்ஃபி எடுக்க, அனுமதி கேட்டுவிட்டுத்தான் எடுக்கவேண்டும் என்றுகூடத் தெரியாமல் உள்ளோம் என்று பேசினார்.
இந்நிலையில் தன்னுடைய செயலுக்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் கஸ்தூரி. அவர் கூறியதாவது:
ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது. ஒர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற எமோஷனல் கைஸ், கண்டிப்பா ஜூலை காற்றில் படத்தை என்ஜாய் பண்ணுவீங்க என்று கூறியுள்ளார்.